Published : 17 Apr 2021 01:44 PM
Last Updated : 17 Apr 2021 01:44 PM

காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்: அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது. தேர்தல் ஆணைய அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எக்மோ கருவியுடன் சிகிச்சையில் இருந்த அவருக்கு காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். திரைப்படத்தில் வசனம் பேசுவது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டியவர்.
அப்துல்கலாம் வேண்டுகோளை ஏற்று ஒருகோடி மரம் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றவர்.

தனது அயராத பணியினால் 33.5 லட்சம் மரங்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் நடுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். பல லட்சம் இளைஞர்கள் அவர் வழியைப் பின்பற்றி மரம் நட்டு வருகின்றனர். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மரம் நட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

திமுக, அதிமுக பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட சமகால தலைவர்கள் அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் விவேக். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அவர் முன்னின்று எடுத்த முயற்சிகளை அரசின் அனைத்து தரப்பினரும் அறிவர்.

தான் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுவதை அறிந்து தான் தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி சுகாதாரத்துறைச் செயலருடன் இணைந்து விழிப்புணர்வு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகர் விவேக் மறைவுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. விவேக்குக்கு அரசு மரியாதையாக காவல்துறை மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விவேக்குக்கு இறுதி அஞ்சலியாக காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து விவேக்கின் இறுதிச் சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூகச் சேவையை கவுரவிக்க அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x