Published : 17 Apr 2021 01:21 PM
Last Updated : 17 Apr 2021 01:21 PM

37 லட்சம் மரம் நட்டு அரசு செய்ய வேண்டியதை தனி மனிதனாக செய்தவர் விவேக்: சீமான் இரங்கல்

சென்னை

நடிகர் விவேக உடல் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவர், அவர் உடல் நலனை சிறப்பாக பேணியவர் அவர் மீண்டுவருவார் என்று நினைத்த நேரத்தில் இவ்வாறு மரணம் அடைந்தது வருத்தத்தை தருகிறது என சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எக்மோ கருவிடுடன் சிகிச்சையில் இருந்த அவருக்கு காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அஞ்சலி கருத்தாக தெரிவித்தது.

எதிர்ப்பார்க்காத ஒரு பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. ஒரு மனிதன் என்று இருந்தால் சிலருக்கு சிலரைப் பிடிக்காது, சிலருக்கு சிலரை பிடிக்கும். எல்லோராலும் விரும்பப்பட்டவர் அன்புச் சகோதரர் விவேக். தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், இதயத்துக்கு நெருக்கமாக உறவாடியவர்.

நடிப்பது என்பதைத் தாண்டி திரைப்படத்தில் கலைவாணருக்கு பிறகு திரையில் சமூக கருத்துக்களை சொல்வதற்கு துணிச்சல் வேண்டும். அதை மிகச்சிறப்பாக செய்ததற்காக அவரை சின்னக்கலைவாணர் என்று அனைவரும் அழைத்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு திரைக்கலைஞன், அதிகமாக இந்த மண்ணை நேசித்தவர், ஐயா அப்துல்கலாமை சந்தித்தப்பின் அவருடைய அறிவுறுத்தல், ஒரு கோடி மரம் நடுங்கள் விவேக் என்று அவர் கூறியதை ஏற்று ஏறத்தாழ 37 லட்சம் மரங்களை இதுவரை நட்டார் என்று நினைக்கிறேன். நான்கூட அடிக்கடி அதைக்குறிப்பிடுவேன்.

ஒரு அரசு, அரசியல் பேரியக்கங்கள் செய்யவேண்டியதை ஒரு தனி மனிதாராக 37 லட்சம் மரக்கன்றுகள் நட்டதை பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட சிறந்த மனிதரை இழந்துவிட்டோம் என்பதை நினைக்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அவர் இனி இல்லை என்பதை மனது நம்ப மறுக்கிறது.

உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டபோது அவர் சரியாகி வந்துவிடுவார் என்று நம்பினேன். காரணம் அவர் உடல்நிலையில் அவ்வளவு அக்கறை செலுத்துவார். யோகா, நடைப்பயிற்சி, சைக்கிளிங் போவாரு, நீச்சல் அடிப்பாரு இவ்வளவு அக்கறையாக இருந்த அவர் மரணம் பேரிடியாகத்தான் நான் கருதுகிறேன், எனது அன்புச் சகோதரனுக்கு என் புகழ் வணக்கம்”.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x