Published : 17 Apr 2021 12:41 PM
Last Updated : 17 Apr 2021 12:41 PM

மகனை இழந்த நிலையிலும் மரம் நடுவதில் கவனம் செலுத்திய விவேக்: சொந்த வாழ்வின் துயரம் தாண்டிய சமூக அக்கறை

மகனுடன் விவேக்

சென்னை

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள் விவேக்குக்கு பொருத்தமானதாக இருக்கும்.

அவரது சமூக அக்கறையால் 'சின்னக்கலைவாணர்' என்ற பெயர் கிடைத்தது அவருக்கு. சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத அப்பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது. ஆனால் வாழ்க்கையிலும் 'சின்னக்கலைவாணர்' என்பது தொடரவேண்டுமா என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது.

பொதுவாழ்வில் தமிழக மக்களுக்கு மேடை நாடகம், சினிமா மூலம் சிறந்த சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர் மறைந்தபோது அவரது வயது 48 மட்டுமே, அவரது இளவல் சின்னக்கலைவாணர் விவேக் 59 வயதில் மரணத்தை தழுவியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் மரணத்தின் போதே பாதி மரணம் அவரை ஆட்கொண்டுவிட்டது, இப்போது வந்துள்ளது மீதி என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். மகனின் மரணத்தின் சோகம் அவரை மிகவும் உடைத்துவிட்டது. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் புத்திர சோகம் அவரை மிகவும் வாட்டியது.

“எல்லோரையும் சிரிக்க வைத்தவர் தனது மகன் மரணத்திற்கு பின்னர் ஒருவித அழுத்ததுடன் வாழ்ந்தது சோகம்” என்கிற பிரேமலதாவின் அஞ்சலி வார்த்தைகளை இங்கு குறிப்பிட வேண்டும். தனது சோகத்தை மறக்க சமூக பணிகளில் இன்னும் தீவிரம் காட்டினார் விவேக். அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுகொண்ட அவர் மரம் நடும் லட்சியத்தை உருவாக்கி அதற்காக பாடுபட்டு வந்தார். அப்துல் கலாமின் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தொடங்கினார். இதுவரை 33.5 லட்சம் மரம் நட்டுள்ளார். கிராமம்தோறும் இளைஞர் குழுக்களை உருவாக்கியுள்ளார்.

விவேக்கின் மகன் பிரசன்னா அவரது மிகப்பெரிய கனவாக இருந்தார். இரண்டு மகள்கள் பிறந்த நிலையில் மூன்றாவதாக பிறந்த மகன் பிரசன்னா மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் விவேக். விவேக்கின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக இசைத்துறையில் இளம் வயதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பிரசன்னா. இளம் தலைமுறையினர் விரும்புவதை அளிக்க வேண்டும் என்கிற லட்சியம் உடைய விவேக் தனது மகன் விரும்பிய அனைத்தையும் செய்துகொடுத்தார்.

அதனால் வரும் காலத்தில் மிகுந்த இசையார்வம் கொண்டிருந்த அவரது மகன் 18 வயதில் சிறந்த இசையமைப்பாளராக வருவான் என எதிர்ப்பார்த்த மகன் 13 வயதில் டெங்குக் காய்ச்சலால் 40 நாட்கள் மருத்துவமனை போராட்டத்திற்கு பின் உயிரிழந்தார். டெங்குக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த விவேக், தனது மகன் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தது அவரை மிகவும் உடைத்துப் போட்டது.

தனது அன்பிற்குரியவர் இழப்பை பகிர்பவர்கள் வார்த்தையில் எவ்வளவு வருத்தமும், மிகுந்த வலியும் இருக்கும் என்பதை அவரது மகன் மரணத்திற்கு பின் விவேக் மகனுக்காக எழுதிய கட்டுரையே சாட்சி. அவ்வளவு சோகத்திலும் பெற்றோர்களே உங்கள் நிறைவேறா கனவுகளை, எண்ணத்தை பிள்ளைகள் மீது திணித்து அவர்களை முடக்கிவிடாதீர்கள் என்று கூறியிருப்பார்.

“இதுவரை ‘புத்திர சோகம்' என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை”. என அவரது துயரம் மிகுந்த வார்த்தைகள் வலியின் ஆழத்தை உணர்த்தியது,

அவரது உள்ளத்தின் வலியை, நம்பிக்கை சிதைந்ததை ஒரு தந்தையாய், நண்பனாய் எப்படியெல்லாம் மகனை பார்த்துப் பார்த்து வளர்த்தேன், அவனது லட்சியத்தை நிறைவேற்ற உதவி அவன் படிப்படியாக முன்னேறுவதை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும்போதே காற்றில் தீபம் அணைவது போல் படக்கென்று டெங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுச் சென்றதை அவர் பதிவிட்டிருந்தது, இதயம் உள்ள ஒவ்வொருவரையும் அழ வைத்தது.

மகனின் மறைவு அவரை உடைத்துப்போட்டாலும் தளராமல் சமூகப்பணியில் அக்கறை செலுத்தினார் விவேக். 2015 ஆம் ஆண்டுஅவரது மகன் மறைவு குறித்து அப்போது விவேக் எழுதிய கண்ணீர் ததும்பும் பதிவு கீழே:

மகனின் இறுதிச் சடங்கில் விவேக்

“சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.

எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும். வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!' எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.', ‘உம்', ‘சரி', ‘மாட்டேன்' என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்.

ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது. அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை.

அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?! தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்' என்பார் (முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார்.

அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக் கொண்டிருந்தார்கள். அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச் செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான். இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது.

அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள்.

தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள். இதுவரை ‘புத்திர சோகம்' என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை.

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.

கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம்.

தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்'களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான்.

அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..! ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை. வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு.

நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம். அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும். ‘The Good, The Bad and The Ugly' என்றொரு இத்தாலிய சினிமா. நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன் ‘The Good, The Bad and The Ugly' படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.

எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன். இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்' இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்! நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே.

அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?'. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna' என்று என்னை அலெர்ட் செய்கிறது”.

இவ்வாறு முடித்திருப்பார் விவேக். அவரது மரணம் அவரது செயல்பாட்டுக்கு தடை போட்டாலும் அவரால் நடப்பட்ட 33.5 லட்சம் மரங்களால் பூமி உள்ளவரை வாழ்ந்து மனிதர்களுக்கு சேவை செய்யும். அவரது பணியை லட்சிய இளைஞர்கள் மரம் நட்டு தொடர்வார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x