Published : 17 Apr 2021 08:56 AM
Last Updated : 17 Apr 2021 08:56 AM

நடிகர் விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி

மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூகச் சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர் என்று தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள நீண்ட இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகினராலும் திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என்றழைக்கப்படுபவரும் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான விவேக் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

விவேக், தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நாட்டம் கொண்டு ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் நடிகராக தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தனது ஆளுமையை கோலோச்சியவர். விவேக் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர்.

இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர்.

அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ‘க்ரீன் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு அதைத் தீவிரமாக செய்துவந்தார்.

விவேக் மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். கலைத்துறையில் இவரது ஈடு இணையற்ற பங்களிப்புக்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது தமிழக அரசின் கலைவாணர் விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

தனது ஈடு இணையற்ற கலைச்சேவையாலும், சமூகச் சேவையாலும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு தமிழ்த் திரைப்படத்துறைக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

அன்னார் மறைந்தாலும் அவரது நடிப்பும் சமூகச் சேவையும் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
விவேக்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கு திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எக்மோ கருவியில் இருந்த அவரது உயிர் இன்று அதிகாலை பிரிந்தது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x