Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

கரோனா காரணமாக மின் கணக்கீடு செய்ய ஊழியர்கள் வீடுகளுக்கு வரவில்லை: மின் கட்டணம் அதிகரிப்பதாக நுகர்வோர் புகார்

சென்னை

கரோனா தொற்று காரணமாக, மின் கணக்கீடு எடுக்க ஊழியர்கள் வீடுகளுக்கு வராததால், கூடுதலாக மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பரவத் தொடங்கியதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மின் கணக்கீடு செய்ய ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்லவில்லை. இதையடுத்து, 4 மாதங்களுக்கு சேர்த்து கணக்கெடுக்கப்பட்டு, அதை இரண்டிரண்டு மாதங்களாக பிரித்து கட்டுமாறு மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால், பல மின்நுகர்வோர் ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தினர்.

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று 2-வது அலைவீசத் தொடங்கி உள்ளது. இதனால் கடந்த ஆண்டைப் போல், வீடுகளுக்கு நேரில் செல்வதற்குப் பதில், அலுவலகத்தில் இருந்தே அவர்களுக்கு தோன்றியபடி மின்கட்டணத்தை ஊழியர்கள் நிர்ணயிக்கின்றனர்.

இதற்கிடையே, சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஒருவர், வழக்கமாக இருமாதத்துக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே மின் கட்டணம் செலுத்துவார். இந்நிலையில், அவருக்குஇம்மாதம் ரூ.19,400 மின்கட்டணமாக வந்துள்ளது. தனது வீட்டுக்குமின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுக்கவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். எனவே, இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முழு ஊரடங்கு பிறப்பித்தால் மட்டுமே அவர்களால் வீடுகளுக்கு நேரில் செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்போது வரை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கிடுகின்றனர். எனினும், இதுகுறித்துஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x