Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

கரோனா அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்: தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிமற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் மாவட்டதேர்தல் அதிகாரிகள் காணொலிவாயிலாக பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.சீனிவாசா, இந்திய தேர்தல் ஆணைய செயலர் மதுசூதன் குப்தா, பார்வையாளர் விபின் கட்டாரா ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த காலகட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் பிஹாரில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இந்த அனுபவங்கள் குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி பகிர்ந்து கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பை அதிகரிப்பது, கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முகவர்கள், போலீஸார், வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கைமையங்களில் உள்ளரங்க ஏற்பாடுகள், அவற்றில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிஹாரில் செய்த ஏற்பாடுகள்குறித்து விளக்கப்பட்டு, அதை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x