Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM

திருமணம் செய்து கொண்ட ஒரே நாளில் பள்ளி மாணவி உயிரிழப்பு: இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை

திருமணம் செய்துகொண்ட ஒரே நாளில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து இளைஞரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள ஒரு கிரா மத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த முரளி (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய முரளி காட்பாடிக்கு வந்துள்ளார். மகளை, காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

முருகன் கோயிலில் திருமணம்

இதற்கிடையில், வள்ளிமலை முருகன் கோயிலில் மாணவியை கடந்த 14-ம் தேதி இளைஞர் திருமணம் செய்து கொண் டுள்ளார். பின்னர், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மாணவி குளிர்பானம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் மாணவியை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த காட்பாடி காவல் துறையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சர்க்கரை நோய் பாதிப்பு

அதில், மாணவிக்கு ஏற் கெனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும் இதற்காகஅவர் இன்சுலின் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர் பழச்சாறு அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவி உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதா? அல்லது உறவினர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்தும் முரளியிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் போளூர் அருகே சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x