அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டால் உதவியாளர் மூலமாக தாக்கல் செய்வதா?- சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டால் உதவியாளர் மூலமாக தாக்கல் செய்வதா?- சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Updated on
1 min read

ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் தனி உதவியாளர் மூலமாக அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஆட்சியர் கையெழுத்திடாமல், அவரது தனி உதவியாளர் அபிசேஷகம் (சென்னை மாவட்ட நில நிர்வாகம்) மாவட்ட ஆட்சியருக்காக என கையெழுத்திட்டிருந்தார்.

இதை கவனித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ள நிலையில், அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘ஆட்சியருக்காக’ என்ற குறிப்புடன் வேறு நபர் கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆட்சியர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in