Published : 16 Apr 2021 06:37 PM
Last Updated : 16 Apr 2021 06:37 PM

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகைப் பதிவுக்கு ரேகை பதிவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தல்

கரோனா பரவ வாய்ப்புள்ளதால் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகை பதிவுக்கு ரேகை பதிவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:

கடந்த 5-ம் தேதி தலைமை செயலாளர், சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சியருடனும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரும் அதேநேரத்தில் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடைமுறைகளையும் கையாள வேண்டிய நிலையில் உள்ளது.

அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களின் வருகை பதிவுக்காக கைவிரல் ரேகை பதிக்கும் நிலையுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசையை அழுத்தும்போதுகூட தொற்று பரவல் கருதி வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது.

போக்குவரத்து கழகங்களில் ரேகை பதித்திடும்போது தொற்று பரவ வாய்ப்புள்ளது. கையுறை பயன்படுத்தினால் கைரேகை பதிவாகாது. எனவே வருகை பதிவு கைவிரல் ரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

பேருந்துகளின் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் காலை, மாலை கூட்ட நெரிசலான நேரங்களில் பேருந்து நிலையம், நிறுத்தங்களில் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் மோதல் போக்கை உருவாக்குகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு சரியான முறையில் தீர்வு காண வேணடும். பயணிகள் முககவசம் அணிவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மட்டும் முககவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்படுகிறது.

அலுவலகம், பணிமனை வளாகங்கள், பேருந்துகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளித்திட வேண்டும். சானிடைசர், கையுறைகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். கிளை உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவுகளை வழங்க வேண்டும்.

வரவு செலவு பற்றாக்குறையால் திணறி வந்த போக்குவரத்து கழக நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்துக்குப்பின் வருவாய் இழப்பாலும் தவித்து வருகின்றன. பேரிடர் நிதியாக ரூ.10 ஆயிம் கோடியை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே கோரிக்கை வைத்திருந்தோம்.

அரசுப் போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர் நலன்களை காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x