Published : 16 Apr 2021 06:37 PM
Last Updated : 16 Apr 2021 06:37 PM

கரோனா 2-வது அலை; போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை; அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை

''கரோனா தடுப்புப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும். மாநில, மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற வேண்டும்'' என கே.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதிய கடிதம்:

“தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்தக் கொடும் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் மோசமாக பாதித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று (15.4.2021) ஒரு நாள் மட்டும் 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 2,558 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 10 சதவிகிதம் கரோனா பரவல் அதிகரிக்கிறது. இது மேலும் உயரக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தளர்த்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைப் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக ரீதியாக சிரமங்கள் தொடர்கின்றன.

போர்க்கால அடிப்படையில் மாநில அரசு, அரசியல் கட்சிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் அனைத்தையும் களமிறக்கி கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மாபெரும் கடமையாற்ற வேண்டியுள்ளது.

எனவே, கரோனா தொற்றுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளிலிருந்து விதிவிலக்கு பெற்று பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு, தேர்தல் ஆணையத்தை அணுகி இதற்கான உரிய உத்தரவுகளைப் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்ட, மாநில அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

* கரோனா தடுப்புப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும். மாநில, மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி அனைத்துக் கட்சிகள் ஒத்துழைப்பையும் பெற வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் அனைத்தையும் கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும்

* தற்போது கைவசமுள்ள தடுப்பூசிகள் சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழகத்தினுடைய தேவைக்கான தடுப்பூசியினை மத்திய அரசிடம் வற்புறுத்திப் பெற்றிட வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வயதினருக்கும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடுவதை உறுதி செய்திட வேண்டும்.

* கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படுவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

ரெம்டெசிவர் மருந்து மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை உறுதி செய்திட வேண்டும்

* கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. இது களையப்பட வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள், திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றிட வேண்டும். அமைக்கப்படும் அனைத்து மருத்துவ முகாம்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் தேவையான அளவிற்குப் பணியமர்த்தப்பட வேண்டும். இம்முகாம்களில் போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்திட வேண்டும்

* தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காகத் தினந்தோறும் காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அதனை விளம்பரப்படுத்திட வேண்டும்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் கரோனா அல்லாத நோய்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அபராதம் விதிப்பதைக் கைவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

* முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தப்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்திட வேண்டும். கபசுரக் குடிநீரும் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கிட வேண்டும்.

* ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200 அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், பரிசோதனைக் கட்டணம் ரூ.1500 வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும்.

முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும்

* மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம், மரணமடைந்தால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுபவருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியது.

ஆனால், இந்த நிவாரணத் தொகை எவருக்கும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த அணுகுமுறை கரோனா தடுப்புப் பணியை பாதிக்கும். எனவே, அரசு அறிவித்தபடி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கிட வேண்டும்

* பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உள்ளது. இதனால் நோய்ப் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,000 நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x