Last Updated : 16 Apr, 2021 05:04 PM

 

Published : 16 Apr 2021 05:04 PM
Last Updated : 16 Apr 2021 05:04 PM

'மதுரை போலீஸாருக்கு மீனாட்சியம்மன் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்': பாஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேச்சு

மதுரை

மதுரை போலீஸாருக்கு மீனாட்சியம்மன் நல்ல புத்தி கொடுக்க வேண்டிக்கொள்ளவோம் என பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசினார்.

கடந்த ஏப்.14ம் தேதி, அம்பேத்கர் பிறந்தநாளன்று மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினர் வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நடைபெற்ற மோதலில் பாஜகவினர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு மதுரை மாநகர் பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமை வகித்தார்.

இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைக் கட்சிகளின் வன்முறைக்கு பாஜகவினர் அஞ்சமாட்டார்கள். பாஜகவினர் தியாகத்துக்கு பெயர் போனவர்கள், தியாகத்துக்காகவே வளர்ந்தவர்கள். தமிழகத்தில் சாதி வன்முறைகளை கட்டவிழ்த்து விட விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளனர்.

இதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன் சாதிக் கட்சியை நடத்தி வருகிறார். அம்பேத்கார் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்தபோது திருமாவளவன் மதுரையில் தான் இருந்தார்.

அவர் தனது கட்சியினர் யாரும் கலவரம் செய்யக்கூடாது என சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சும்மாயிருக்காது.

தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும், தெய்வீக, ஆன்மிக தமிழகம் மலர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். ஆனால் திருமாவளவன் சாதி பிரச்சினையை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார். பாஜகவினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:

மதுரை போலீஸார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். பாஜகவினர், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜகவினருக்கு எதிரான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை காவல்துறைக்கு நல்ல புத்தி வர வேண்டும் என மீனாட்சியம்மனை வேண்டிக்கொள்வோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தடா பெரியசாமி, மாநில எஸ்சி அணி தலைவர் பாலகணபதி உள்ளிட்டோர் பேசினர். மதுரை வடக்கு வேட்பாளர் டாக்டர் பா.சரவணன், பாஜக அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜரத்தினம், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், நகர் மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருளமாள், முன்னாள் தலைவர் சசிராமன், துணைத் தலைவர்கள் ஹரிகரன், கராத்தே ராஜா, ஊடக பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x