Published : 15 Dec 2015 07:58 AM
Last Updated : 15 Dec 2015 07:58 AM

6 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் நாளை பாய்கிறது பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்: 59 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது

பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்கள் நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலமாக ஏராளமான செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண் ணில் ஏவியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான 6 செயற்கைக் கோள்கள் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன.

இவற்றில் ‘டெலியோஸ்-1’ (TeLEOS-1) என்பதுதான் முதன்மை செயற்கைக் கோள். 400 கிலோ எடை கொண்ட இது, தொலைஉணர்வு பயன்பாட்டுக்கானது. மற்ற 5 செயற்கைக் கோள்களில் 2 சிறியவை (மைக்ரோ சாட்டிலைட்), 3 மிகச்சிறியவை (நானோ சாட்டிலைட்) ஆகும். இந்த 6 செயற்கைக் கோள்களும் 550 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்ட தயாரிப்பு மறுஆய்வுக் குழுவும், ராக்கெட் ஏவுவதற்கான அனுமதி வாரியமும் ஒப்புதல் அளித்த நிலையில், பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் புறப்படுவதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x