கரோனா பரவல்; மீண்டும் ஊரடங்கா? - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்: கோப்புப்படம்
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, தமிழகத்தில் கரோனா பரவலின் இரண்டாவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விளக்கம் அளித்ததுடன், உயர் நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (ஏப்.16) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், சுகாதாரத் துறைச் செயலாளர், இதர துறைகளின் செயலாளர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கெனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், வார இறுதி நாட்களில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுப்பு, திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமலில் உள்ளன. மேலும், மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் துறை அறிவிப்பின்படி, தமிழகத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

மீண்டும் ஊரடங்கு?

தலைமைச் செயலர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு, சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு நிலை மேலும் மோசமானால், அடுத்த வாரத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in