Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM
கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவுப்படி, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக் கவசம்மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றியதாக கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்புத்தாண்டு தினமான 14-ம் தேதிமட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 8-ம் தேதி முதல்14-ம் தேதி வரை மொத்தம் 10,018 வழக்குகளும், 14-ம் தேதியில் 1,011 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 7 நாட்களில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 59 வழக்குகள் பதிவாகி உள்ளன. 14-ம் தேதி மட்டும் 69 ஆயிரத்து 553 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது கடந்த 7 நாட்களில் ஒருலட்சத்து 7 ஆயிரத்து 836 வழக்குகளும், 14-ம் தேதி மட்டும் 14 ஆயிரத்து 868 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகப்படியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடந்த 7 நாட்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 250 வழக்குகளும், 14-ம் தேதியன்று 19 ஆயிரத்து 551 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகவலை தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT