Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்- தலைமறைவாக இருந்த நபர் பிடிபட்டார்: கைதான 13 பேரில் 2 பேர் அதிமுக பிரமுகர்கள்

குமாரபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே கைதான 12 பேரில் இரண்டு பேர் அதிமுக பிரமுகர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குமாரபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தறித் தொழிலாளியின் 14 வயது மகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியா அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாயார் உட்பட 12 பேரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் குமாரபாளையம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஏற்கெனவே கைதான 12 பேரில் இரண்டு பேர் அதிமுக பிரமுகர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ளவர்கள் என்பதும் சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் பூத் ஏஜென்ட்டாக செயல்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என திருச்செங்கோடு அனைத்துமகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எருமப்பட்டியிலுள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x