Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

மதுரை மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

மதுரை பெரியார் பஸ் நிலையப் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையின்போது முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்ற வாகனங்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை மீண்டும் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது.

மதுரையில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோடை மழை பெய்தது. அதன்பிறகு ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. ஆனால், புழுக்கம் குறையவில்லை.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று திடீரென மாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், நேற்றிரவு இதமான காலநிலை நிலவியது.

தொடர்ந்து கோடைமழை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு கோடை வெப்பம் குறையவும் வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மாலையில் வெப்பம் குறைந்து காணப்படுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று பகலில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் இதமான தட்பவெப்பநிலை நிலவியது.

பழநியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விட்டுவிட்டு அதிகாலை வரை பெய்தது. நத்தம் பகுதியில் நேற்று மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோடையின் தாக்கத்தால் பயிர்கள் கருகத் தொடங்கிய நிலையில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு பகலில் வெப்பம் அதிகரித்த நிலையில் நேற்று பகலிலேயே வெப்பம் குறைந்து காணப்பட்டது. மாலையில் குளிர் காற்று வீசியது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது மட்டுமின்றி, பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையும் தீரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x