Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி: நோய் பரவும் அபாயத்தால் பயணிகள் அச்சம்

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி இருப்பதால் நோய் கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தென்காசி புதிய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதிக்கு அருகில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. குடிநீர் தொட்டிக்கு அருகில் சேறு தேங்கிக் கிடக்கிறது. குடிநீர் தொட்டியிலும் பாசி படர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறும் போது, “குடிநீர் தொட்டியைச் சுற்றியுள்ள பகுதியையே சுகாதாரமான முறையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தொட்டியில் உள்ள தண்ணீர் எப்படி சுத்தமான தண்ணீராக இருக்க முடியும்?. குடிநீர் தொட்டியை எப்போதாவது கழுவியது உண்டா என்பது தெரியவில்லை. குடிநீர் மூலமாகத்தான் பெரும்பாலான நோய்கள் பரவுகின்றன. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும்.

மாவட்ட தலைநகராக உள்ள தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் வைக்க வேண்டும். மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான பகுதிகளில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x