Published : 15 Apr 2021 07:35 PM
Last Updated : 15 Apr 2021 07:35 PM

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியது வீணானதா? கழிவுநீர் தேங்குவதால் பரவும் தொற்று நோய்கள்

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட நிதி ரூ.21 கோடியைக் கொட்டி வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டியது வீணாகியுள்ளது.

தற்போது அந்த தடுப்பணைகளில் கழிவு நீர் மட்டுமே தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்தமிழகத்தின் முக்கிய நதிகளில் வைகை ஆறு முக்கியமானது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலையில் உற்பத்தியில் இந்த ஆறு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களை செழிக்க செய்து கடலில் சென்று கலக்கிறது.

கடந்த 25 ஆண்டிற்கு முன் வரை, வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடாவிட்டாலும் ஆங்காங்கே ஆற்று வழித்தடத்தில் இணையும் கிளை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் ஆற்றில் கலந்து ஆண்டுமுழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படும்.

அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் இரு கரைகளையும் தொட்டப்படி வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். காலப்போக்கில் ஆற்று வழித்தடத்தில் உள்ள கிளை நதிகள் மாயமானதோடு வைகை ஆற்றின் மணலும் பெருமளவு கொள்ளைப்போனதால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டது.

மேலும், மழைப்பொழிவும் குறைந்ததால் வைகை ஆறு வறட்சிக்கு இலக்காக தொடங்கியது. அதனால், கடந்த 10 ஆண்டுகளாக மழைக்காலத்தில் கூட வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படுகிறது. மற்ற நாட்களில் வைகை ஆற்றில் கழிவு நீர் மட்டுமே சிறுநீரோடைபோல் ஓடுகிறது.

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை நகர்ப்பகுதி வைகை ஆற்றில் ஆண்டு முழுவதுமே நீரோட்டம் காணப்படுவதற்கும், தண்ணீரை தேங்கி நகர்ப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் இரு தடுப்பணைகள் கட்டப்பட்டன.

ஏவி மேம்பாலம் அருகே ஒரு தடுப்பணையும், ஒபுளாபடித்துறையில் மற்றொரு தடுப்பணையும் ரூ. 21 கோடியில் கட்டப்பட்டன. தடுப்பணை கட்ட 2 ஆண்டுகளாகியது. இதுவரை இந்த தடுப்பணையால் வைகை ஆற்றில் வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கவும் முடியவில்லை. அதன் மூலம் நகரில் ஆண்டு முழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டத்தைப் பராமரிக்கவும் முடியவில்லை.

தற்போது வரை தடுப்பணைகளில் ஆங்காங்கே நகர்ப் பகுதியில் திறந்துவிடப்படும் கழிவு நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது மட்டும் தடுப்பணைகளில் தண்ணீர் ஒரளவு தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரையும் உடனடியாக அதிகாரிகள் திறந்துவிட்டுவிடுகின்றனர். அதனால், எந்த நோக்கத்திற்காக வைகை ஆற்றில் ரூ.21 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி தடுப்பணையை மாநகராட்சி கட்டியதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் போய்விட்டது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தடுப்பணைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போதுதான் தற்போது தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கி தெப்பக்குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது.

மற்ற நாட்களில் தண்ணீரைத் தேக்கினால் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்பதால் திறந்துவிட்டுவிடுகின்றனர். இன்னும் தடுப்பணைகள் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.

‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளும் நிறைவடையவில்லை. அனைத்துப்பணிகளும் நிறைவடைந்தபிறகு தடுப்பணைகளால் மதுரைக்கு பலன் கிடைக்கும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x