Last Updated : 15 Apr, 2021 05:36 PM

 

Published : 15 Apr 2021 05:36 PM
Last Updated : 15 Apr 2021 05:36 PM

கலப்படமில்லா கருப்பட்டி, பனங்கற்கண்டு விற்பனையை உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கலப்படம் இல்லாத கருப்பட்டி, பனங்கற்கண்டு விற்பனை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தின் மாநில மரம் பனைமரம். இதன் ஒவ்வொரு பாகமும் பயன் தரக்கூடியது. இப்பாகங்களிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், பனங் கருப்பட்டி பனங்கற்கண்டு ஆகியன மருத்துவ குணம் நிறைந்தவை.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. உடன்குடி, வேம்பார் பகுதிகளில் தயாரிக்கப்படும் பனைவெல்லம், பனங்கற்கண்டு மிகவும் பிரபலமானது.
தற்போது பலர் சர்க்கரை பாகு, சர்க்கரை மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்து போலியான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, சர்க்கரை, சர்க்கரை பாகு கலந்த பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும். சர்க்கரைப்பாகு, சர்க்கரை கலந்த பனை வெல்லம் பனங்கற்கண்டு விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பனை வெல்லம், பனங் கற்கண்டு தயாரிப்பில் கலப்படங்களை தடுக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் மதுரை, சேலம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொதுமக்களுக்கு தரமான கருப்பட்டி, பனங்கற்கண்டு விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில அளவிலான குழுவின் தலைவர் அடுத்த விசாரணையின் போது காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x