Published : 15 Apr 2021 04:02 PM
Last Updated : 15 Apr 2021 04:02 PM

நாடெங்கும் கரோனா 2-வது அலை; முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேவையா?- ஸ்டாலின் கேள்வி

நாடெங்கும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் நிலையில், அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேவையா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மற்ற மாநிலங்களுக்குப் போய் எழுத வேண்டியுள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவதால் மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் நீட் தேர்வு இந்த நேரத்தில் தேவையா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவு:

“கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டிருக்க, அனைத்து இடர்களையும் எதிர்த்து நமது மருத்துவர்களும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்க, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்த இது சரியான நேரமா?”

இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x