Last Updated : 15 Apr, 2021 03:22 PM

 

Published : 15 Apr 2021 03:22 PM
Last Updated : 15 Apr 2021 03:22 PM

புதுச்சேரியில் கரோனா சிகிச்சையில் 3,268 பேர்; புதிதாக 413 பேர் பாதிப்பு: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது. 3,268 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுவரை 1.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,811 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 340 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 13 பேருக்கும், மாஹேவில் 30 பேருக்கும் என மொத்தம் 413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 606 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,662 பேரும் என 3,268 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் மாஹேவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி மாஹே அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 699 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.52 ஆக உள்ளது.

இதனிடையே இன்று 176 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 895 (91.35 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 607 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 668 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 29 ஆயிரத்து 491 சுகாதாரப் பணியாளர்கள், 16 ஆயிரத்து 923 முன்களப் பணியாளர்கள், 84 ஆயிரத்து 150 பொதுமக்கள் என 1 லட்சத்து 30 ஆயிரத்து 564 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x