Published : 15 Apr 2021 01:56 PM
Last Updated : 15 Apr 2021 01:56 PM

வளிமண்டலச் சுழற்சி; 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

கேரளா முதல் வடக்கே உள் கர்நாடகா வரை (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக

இன்று (ஏப்ரல் 15) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய) கனமழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 16 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 17 அன்று தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

காங்கேயம் (திருப்பூர்) 11 செ.மீ., கொடுமுடி (ஈரோடு), பவானி (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 9 செ.மீ., அவிநாசி (திருப்பூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 8 செ.மீ., போடிநாயக்கனூர் (தேனி) குமாரபாளையம் (நாமக்கல்) நெடுங்கல் (கிருஷ்ணகிரி) வில்லிவாக்கம் குட்வில் பள்ளி (சென்னை) தலா 7 செ.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 6 செ.மீ., பரமத்தி (கரூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை) பாடாலூர் (பெரம்பலூர்) வால்பாறை (கோவை) தலா 5 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (ஏப்ரல் 15) தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x