Published : 15 Apr 2021 11:32 AM
Last Updated : 15 Apr 2021 11:32 AM

இரவு நேர ஊரடங்கு?- அதிகரிக்கும் கரோனா பரவல்: தலைமைச் செயலர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா எதிர்ப்பு அலை மிக வேகமாகப் பெருகி வருகிறது. நேற்று மட்டும் 7,819 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் வழக்கமான எண்ணிக்கையை விட 1000 என்கிற எண்ணிக்கை கூடுதலாக வருகிறது. தொற்றுப் பரவல் வேகம் தினம் தினம் 11% என்கிற அளவுக்கு அதிகரித்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது அலையின் தாக்குதல் மிக வேகமாக உள்ளது. மொத்தத் தொற்றில் சென்னையில் மட்டும் 35%க்கு மேல் தொற்று பாதிப்பு உள்ளது. பொதுமக்கள் இடையே முகக்கவசம் அணிவதில் உள்ள அலட்சியம் அபராதம் விதித்தும் குறையவில்லை. சினிமாவைத் தாண்டி டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடிகர் கடை திறப்பு விழாவுக்கு வந்தால்கூட ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளியின்றி கூடுவதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதையும் காண முடிகிறது.

தற்போது பரவும் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை, தொற்றுள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது, அதிக அளவில் தனிமைப் பகுதிகளை உருவாக்குவது, கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது, முகக்கவசம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது, தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஆனாலும், தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. தற்போது அளிக்கப்பட்ட தளர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது, பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி தமிழகம் நகர்ந்தால் மட்டுமே தொற்றுப் பரவலைத் தடுக்க இயலும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் தொற்றுப் பரவல் குறித்து ஆலோசனை நடத்தவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், உள்துறைச் செயலர், காவல் உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர் குழுவினர் கலந்து கொள்வார்கள். இதில் இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளை நீக்கி கட்டுப்பாடு உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x