Published : 15 Apr 2021 10:28 AM
Last Updated : 15 Apr 2021 10:28 AM

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு?- தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா? ஒத்திவைப்பதா? என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடக்க உள்ளது. ஆலோசனைக்கூட்ட முடிவில் தேர்வு நடக்குமா? ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தின. பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில் மற்ற தேர்வுகள் நடக்காமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிகள் நடத்த இயலாத சூழ்நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

கரோனா தொற்றும் குறைந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கல்லூரிகள், பள்ளிகளில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் தொற்று குறையாததாலும், இரண்டாம் அலை பரவலாலும் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டனர். ஆசிரியர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது. மேலும் சில மாவட்டங்களிலும் தொற்று ஏற்பட்டது.

சில நாட்கள் கழித்து தேர்தல் பிரச்சாரத்துக்காக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் அலை வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதனால் பிளஸ் 2 தவிர அத்தனை மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவம், பொறியியல் இன்ன பிற துறை சார்ந்த கல்லூரி படிப்புக்குச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு மட்டும் தேர்வு நடத்துவது என முடிவெடுத்து மே 3 அன்று தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மே.2 வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 5 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றப்படுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் மும்மடங்கு வேகத்துடன் பரவி வருகிறது. தமிழகம் கரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. மூன்று மாதத்தில் கடந்த ஆண்டு எட்டிய உச்சத்தை 30 நாளி எட்டியுள்ளது. நேற்று 8000 என்கிற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. அதிலும் தலைநகர் சென்னை 2500 என்கிற எண்ணிக்கையை தாண்டிச் செல்கிறது.

தினசரி கரோனா பரவல் சதவீதம் 10% மேல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது, இந்நேரத்தில் அகில இந்திய அளவில் நடக்கும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ஒத்தி வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. கரோனா பரவல் இன்னும் வரும் மாதத்தில் அதிகரிக்கும், அது முழுதுமாக கட்டுப்பாட்டுக்குள் வர 2 மாதத்துக்கு மேல் ஆகலாம் என்பதால் சுகாதாரத்துறையும் தேர்வை ஒத்திவைப்பதே சிறந்தது என அரசுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்வை நடத்துவதா? ஒத்திவைப்பதா என்பது குறித்து தலைமைச் செயலர் தலைமையின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்தக்கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறைச் செயலர், உயர்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்தக்கூட்டத்தின் முடிவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x