Last Updated : 15 Apr, 2021 03:10 AM

 

Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

மசினகுடியில் மூச்சுவிடவும், உணவு உட்கொள்ளவும் சிரமப்படும் ‘ரிவால்டோ’ யானைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுமா? - இயற்கை மற்றும் வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மூச்சுவிட சிரமப்பட்டு வரும் மசினகுடி ‘ரிவால்டோ’ யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டம் பகுதியில் கடந்த10 ஆண்டுகளாக சுற்றிவரும் ரிவால்டோ யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டு, நுனிப்பகுதி துண்டானது. இரை தேடுவதில் சிரமம் இருப்பதால், உணவுதேடிகுடியிருப்புப் பகுதிகளில் ரிவால்டோ வலம் வரத்தொடங்கியது. யானையை சிகிச்சைக்காக முதுமலைக்கு அழைத்துச் செல்ல வனத் துறையினர் முடிவு செய்தனர்.

வாழைத் தோட்டத்திலிருந்து, பழங்களைக் கொடுத்தே ரிவால்டோவை முகாமுக்கு அழைத்து செல்லும் முயற்சி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து வாழைத் தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து, யானைக்கு சிகிச்சையளிக்க வனத் துறையினர் ஏற்பாடு செய்தனர். ரிவால்டோவை முகாமுக்கு கொண்டு செல்லக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில்,நீதிமன்றத்தின் வழிகாட்டுதலால், கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் வனத் துறையினர் கைவிட்டனர். இதனால், வாழைத்தோட்டம், மசினகுடி குடியிருப்புப் பகுதிகளிலேயே யானை வலம் வருகிறது.

மூச்சுவிட சிரமப்படுவதால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத் துறையினர் முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மசினகுடியை சேர்ந்த வன ஆர்வலர்ஆபித் கூறும்போது ‘‘ரிவால்டோ யானை உணவு உட்கொள்ளவும், மூச்சுவிடவும் மிகவும் சிரமப்படுகிறது. இதனால், வனத் துறையினர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது ‘‘ரிவால்டோவை பிடிக்கக்கூடாது என நீதிமன்றம்வழிகாட்டுதல் வழங்கியுள்ளதால், அதைக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க முடியாது. இருப்பினும் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதற்கு பழங்கள் மூலம் மருந்துகளை வழங்கி வருகிறாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x