Last Updated : 15 Apr, 2021 03:11 AM

 

Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

குமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோகநெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நெல் சாகுபடிக்கான பாசன நீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. தற்போதும் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 39.50 அடி, பெருஞ்சாணியில் 52.55 அடி தண்ணீர் உள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் ஜூன் மாதம்தொடங்கும் கன்னிப்பூ சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என, விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பப்பூ நெல் அறுவடை கடந்தமாத இறுதியில் நிறைவடைந்த நிலையில், நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் செய்யப்பட்ட விலை நிர்ணயத்தால், போட்டிப்போட்டு தனியார் நெல் அரவை உரிமையாளர்களும் நெல்லை நல்ல விலைக்கு கொள்முதல் செய்தனர்.

பொன்மணி, டி.பி.எஸ்.3, திருச்சி 3 போன்ற நெல் ரகத்துக்கு நல்ல மவுசு இருந்தது. 100 கிலோ நெல் மூட்டை ரூ.1,920-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இயற்கையும் ஒத்துழைப்பு வழங்கியதால் வயல்களில் நெல் சேதமாகாமல் விவசாயிகள் நெற்பயிர்களை கரைசேர்த்தனர். அதுமட்டுமின்றி வைக்கோலை வாங்க கேரள வியாபாரிகள் போட்டிப்போட்டனர். அங்குள்ள கால்நடைகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் வைக்கோல் கொள்முதல் செய்யப்பட்டது. இயந்திரம் மூலம் வயல்களுக்குள் கட்டப்படும் ஒரு சிறிய கட்டு வைக்கோல் ரூ.40-க்கு விற்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 60 கட்டுக்கு மேல் வைக்கோல் கிடைத்தது.

தற்போது, கன்னிப்பூ சாகுபடிக்கான நெல் நாற்றங்கால் பாவும் பணி இன்னும் இருவாரத் தில் தொடங்க உள்ளது.

தட்டுப்பாடின்றி நெல் விதைகள்

இதுகுறித்து தேரூர் விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறும்போது, “கன்னிப்பூவில் 110 நாட்களில் அறுவடை பருவத்தை எட்டும்அம்பை 16, திருப்பதிசாரம் 5 ஆகியநெல் ரகங்களை நடவு செய்யவுள்ளோம். நாற்றங்கால் பாவ நெல்விதைகளை விவசாயிகள் வாங்கிவருகின்றனர். வேளாண் மையங் களில் தட்டுப்பாடின்றி நெல் விதைகள் கிடைக்கின்றன. இன்னும் இரு வாரத்துக்குள் நாற்றங்கால் பாவும் பணி தொடங்கும். கடைவரம்புவரை தண்ணீர் கிடைக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் பாசன கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து கொடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x