

தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவர, சுற்றுலா துறை சார்பில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில், அந்த நகரின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் வகையில் ‘செல்பி பாயிண்ட்’கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. கடந்த ஓராண்டிற்கு முன், சுற்றுலாத்துறை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து தமிழ்நாடு ஹோட்டல்களையும் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக புனரமைத்தது.
மதுரையில் அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகமும், திருமண நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்றார்போல் அதன் ஹால்களும் புதுப்பொலிவுபடுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் உயர்தர சமையல் கலைஞர்களைக் கொண்டு விருந்து உணவுகளும் குறைந்தவிலையில் ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்து வழங்குகிறது.
மேலும், கட்டணமும் குறைவு என்பதால் தற்போது தமிழ்நாடு ஹோட்டலில் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் அனைத்து முகூர்த்த நாட்களிலும் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள மூன்று அரங்குகள் ஒய்வில்லாமல் நிகழ்ச்சிகள் நடந்ததாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு நேரங்களில் ரிசார்ட்களை போல் தமிழ்நாடு ஹோட்டல் அலங்காரம் செய்து அதன் வளாகத்தில் திறந்த வெளியில் காற்றோட்டமாக அமர்ந்து கொண்டு மெகா சைஸ் டிவிகளை பார்த்துக் கொண்டே சுற்றுலாப்பயணிகள் சாப்பிடுவதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்னும் தமிழ்நாடு ஹோட்டல்களை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, அவர்களை கவரவும் தற்போது மதுரை போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களில் உள்ள அதன் நுழைவுவாயில் பகுதியில் ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் தங்குவதற்கும், சாப்பிடவும் வரும் சுற்றுலாப்பயணிகள், அரங்குகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுமக்கள் ஆர்வமாக இந்த செல்பி பாயிண்ட்டில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் அதன் பராம்பரிய அடையாளத்துடன் அதன் ‘செல்பி பாயிண்ட்’டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் அமைத்துள்ள ‘செல்பி பாயிண்ட்’டில் மதுரையின் பராம்பரிய அடையாளமுமான மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபமும், ஜல்லிக்கட்டும் இடம்பெற்றுள்ளது.