

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழ்ப் புத்தாண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ராஜ்நிவாஸை திருவள்ளுவர் அலங்கரித்து வழிகாட்டுகிறார் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கடந்த வாரம் புதுச்சேரி கலை மற்றும் கைவினை கிராமத்தைப் பார்வையிடச் சென்றார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி திருவள்ளுவர் சிலையைச் செய்தார். சித்திரைத் திருநாள், தமிழ்ப் புத்தாண்டான இன்று (ஏப்.14) அச்சிலை ஆளுநர் மாளிகையில் நிறுவப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "மகிழ்ச்சியாக தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழ் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருமை கொள்கிறோம். ஈரடியால் உலகை அளந்த திருவள்ளுவர் இன்று ராஜ்நிவாஸை அலங்கரித்து வழிகாட்டுகிறார்" என்று தெரிவித்தார்.