Last Updated : 14 Apr, 2021 03:11 PM

 

Published : 14 Apr 2021 03:11 PM
Last Updated : 14 Apr 2021 03:11 PM

புதுச்சேரியில் 45,000-ஐக் கடந்த கரோனா தொற்று; புதிதாக 476 பேர் பாதிப்பு: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் புதிதாக 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (ஏப்.14) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 4,376 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 333 பேருக்கும், காரைக்காலில் 104 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என, மொத்தம் 476 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும், காரைக்காலைச் சேர்ந்த ஒருவரும் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 698 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.54 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 45 ஆயிரத்து 449 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 616 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,416 பேரும் என, 3,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 242 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 719 (91.79 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 7 லட்சத்து 12 ஆயிரத்து 231 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 282 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் 29 ஆயிரத்து 427 பேர் (68 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 852 பேர் (56 நாட்கள்), பொதுமக்கள் 75 ஆயிரத்து 657 பேர் (40 நாட்கள்) என, மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 936 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x