அரக்கோணம் இரட்டைக் கொலையை சாதிப் பிரச்சினையாக்க முயற்சி: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு

அரக்கோணம் இரட்டைக் கொலையை சாதிப் பிரச்சினையாக்க முயற்சி: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தில் தனி நபர்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்க முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 7-ம் தேதி கொல்லப்பட்டனர். இதில், அர்ஜூனன் கொலை செய்யப்பட்டபோது, அவருக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியிருந்தது. அவர்களின் நண்பர்கள் மதன், வல்லரசு, சவுந்தர்ராஜ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருமாள் ராஜப்பேட்டை இளைஞர்கள் சராமரியாகத் தாக்கியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெருமாள் ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதன், அஜித், புலி என்ற சுரேந்திரன், நந்தகுமார், கார்த்திக், சத்யா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூர்யா, அர்ஜூனன்
சூர்யா, அர்ஜூனன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திருவேற்காட்டில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''அரக்கோணத்தில் நடைபெற்ற நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. ஏனெனில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் கூறியதுபோல இந்தச் சம்பவம் தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. தனி நபர்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சினையை சாதிப் பிரச்சினையாகக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன.

இதைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. ஏற்கெனவே பூவை ஜெகன் கூறியது போல நான்கு தனி நபர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை, தேவையில்லாமல் இரண்டு சாதிகளுக்கு இடையேயான பிரச்சினையாக உருவாக்க எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு தகர்த்தெறியும்''.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in