Published : 14 Apr 2021 01:07 PM
Last Updated : 14 Apr 2021 01:07 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 10 மாவட்டங்களில் கனமழை; அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

குமரிக் கடல் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். 3 நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குமரிக் கடல் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக,

ஏப்ரல் 14 (இன்று) தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 15 (நாளை) தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய) கனமழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 16 அன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 17, ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

கோத்தகிரி (நீலகிரி) 11 செ.மீ., எடப்பாடி (சேலம்) 8 செ.மீ., ஆரணி (திருவண்ணாமலை), சோலையாறு (கோவை) தலா 5 செ.மீ., வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கோடநாடு (நீலகிரி) தலா 4 செ.மீ., கயத்தாறு (தூத்துக்குடி), மேட்டூர் (சேலம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), சின்னக்கல்லாறு (கோவை), தொண்டி (ராமநாதபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x