

கடந்தமுறை கிள்ளியூர் தொகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார். இம்முறையும் கிள்ளியூரில் அவரே போட்டியில் இருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தபோது கட்சிக்காக உழைத்த ராஜேஷ்குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜேஷ்குமாரை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது காங்கிரஸ் தலைமை. கிள்ளியூர் தொகுதியில் மீனவர்கள் வாக்கு மட்டுமே சுமார் 50 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளது. இதைக் கணக்கில் வைத்து இங்கே இம்முறை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸுக்குள் பலமாக எழுந்தது. ஆனாலும் ராஜேஷ்குமாருக்கே சீட் கொடுத்தது காங்கிரஸ். ஆனாலும், பாஜகவை வளரவிடக் கூடாது என்ற திட்டத்தில் இம்முறையும் பெருவாரியான மீனவர்கள் கைக்கே கைகொடுத்தார்கள். அதற்கு உடனடி நன்றிக்கடனாக, ராஜேஷ்குமாரை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீனவச் சமூகத்து பெண்மணியான தாரகை கட்பர்ட்டை மாவட்டத் தலைவராக நியமித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. தமிழக காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் மாவட்ட தலைவர் என்ற பெருமை ஒருபுறமிருக்க, விஜயதரணி எம்எல்ஏ-வின் முக்கியத்துவத்தைக் குறைக்கவே தாரகையை தலைவர் பதவியில் அமர்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்