Last Updated : 14 Apr, 2021 03:14 AM

 

Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கோவை மாவட்ட தொழில் துறையில் நெருக்கடி: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

கோவை

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கோவை மாவட்டத்தில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் பிரதான நம்பிக்கையாக ஜாப் ஆர்டர்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் விலை உயர்வு தொழில் துறையினரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இதுகுறித்து குறுந்தொழில் முனைவோர்களுக்கான டேக்ட் அமைப்பின் கோவை தலைவர் ஜே.ஜேம்ஸ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கரோனா முதற்கட்ட பாதிப்பின்போது குறுந்தொழில் முனைவோர்களுக்கு கடன் வசதி உட்பட எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. அப்போதைய பாதிப்பிலிருந்து மீளத்தொடங்கிய நேரத்தில், காஸ்டிங், கன்மெட்டல், பித்தளை, அலுமினியம், இரும்பு, காப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகை உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சிலவற்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு அனைத்து தொழில் துறையினரையும் பாதித்துள்ளது. இதனால் ஏற்கெனவே மூலப்பொருட்கள் பழைய விலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஆர்டர்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே, ராணுவ தளவாடங்கள், கப்பல், ராக்கெட் ஏவுதல் போன்ற அரசுத் துறைகளின் ஆர்டர்கள், ஒப்பந்த விலைக்கு முடித்துக் கொடுக்க வேண்டும். செய்ய முடியாத நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைத்து விடுவார்கள். அடுத்து அவர்களால் எந்த ஆர்டர்களையும் எடுக்க முடியாது. இதனாலேயே மூலப்பொருட்கள் விலை உயர்வால் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஆர்டர்களை முடிக்க கோவை தொழில் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

மூலப்பொருட்களின் விலை உயர்வை நிர்ணயிக்க கமிட்டி ஒன்றை ஏற்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவைபோகவே மூலப்பொருள் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

குறுந்தொழில் முனைவோர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி, ஓர் ஆண்டுக்கான மின்கட்டண பொறுப்பேற்பு உள்ளிட்டவற்றை அரசு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x