Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

பவானி அருகே நாய் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

பவானி அருகே நாய் கடித்து 12 ஆடுகள் உயிரிழந்த இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு

பவானி அருகே நாய் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூர்ணம் என்ற மூதாட்டி, 25-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது ஆட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம விலங்கு ஒன்று ஆடுகளைக் கடித்து காயப்படுத்தியது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பூர்ணம், சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அந்த விலங்கு அங்கிருந்து ஓடியது. மர்ம விலங்கு கடித்து காயப்படுத்தியதில் 12 ஆடுகள் இறந்தன.

தகவலறிந்த அந்தியூர் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த ஆடுகளில் தடயங்கள் சேகரித்து சோதனை நடத்தியதில், வீடுகளில் வளர்க்கக்கூடிய நாய் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பவரது பட்டியில் வளர்த்து வந்த 7ஆடுகளும், மர்ம விலங்கு கடித்ததில் இறந்தன. ஆடுகளைக் கடித்துக் கொல்வது நாய்தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x