Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலர்கள் விஷமருந்தி தற்கொலை

மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கம் அரசன்கழனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண்-பெண் சடலங்கள் கிடப்பதாக பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த அபினாஷ் (30), அவரது அத்தை மகள் பல்லவி(21) என்பதும், இருவரும் பெங்களூரு ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பட்டதாரிகளான இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள, அபினாஷ் தங்கை வீட்டுக்கு வந்து, தங்கியுள்ளனர். இதற்கு பெண்ணின் தாய் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூருவுக்கு திரும்பி வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரு செல்வதாகக் கூறிச் சென்ற அபினாஷ், பல்லவி ஆகியோர், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பெரும்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x