Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

மின் இணைப்பு பெயர் மாற்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்

சென்னை

மின் இணைப்பு பெயர் மாற்ற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை மின் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிதாக மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, புதிதாக மின்இணைப்புக் கோரி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மின் வாரியம் அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம், விண்ணப்பிக்கும் தேதி, மின் இணைப்பு வழங்கும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினியில் பதிவாவதால், மின் இணைப்பு வழங்குவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடித்து சரி செய்ய முடிகிறது.

இந்நிலையில், ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை மற்றொருவர் பெயரில் மாற்ற வேண்டுமெனில், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை தற்போது உள்ளது.

ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பெயர் மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இணையதளம் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறையை மின் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், காலதாமதம் ஏற்படுவது குறையும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x