Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM
பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு அலுவலர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதன்மை தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 முதல் 16 வரை ‘தடுப்பூசி திருவிழா’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், முன்களப் பணியாளர்கள், அரசு அலுவலர்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் பழனிசாமியும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை பரவி வருவதால், நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித்துறை அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அலுவலர்கள் அனைவரும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், வட்டம், கோட்ட அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை கண்காணித்து, உறுதிப்படுத்தி அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT