ஸ்ரீவில்லி.யில் மாதவராவ் மகள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்: காங்கிரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

வில்லிபுத்தூரில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
வில்லிபுத்தூரில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
Updated on
1 min read

கரோனா தொற்றால் உயிரிழந்த வில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மகள் திவ்யா இத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.

கரோனா தொற்றால் இறந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வில்லிபுத்தூர் தொகுதியில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெறுவது உறுதி. மாதவராவ் வெற்றி பெற்று நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகள் திவ்யாராவுக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in