Last Updated : 13 Apr, 2021 07:04 PM

 

Published : 13 Apr 2021 07:04 PM
Last Updated : 13 Apr 2021 07:04 PM

திருப்பத்தூர் அருகே மலைக்குகையில் புதிய கற்காலம் பாறை ஓவியங்கள், மனித வாழ்விடங்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே புதிய கற்காலப் பாறை ஓவியங்கள், மனித வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர். .பிரபு தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் முனைவர்.சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் வரலாற்று ஆய்வுகளை ஆராய்ந்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அருகே புதிய கற்காலப்பாறை ஓவியங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடங்களை ஆய்வுக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் முனைவர். .பிரபு கூறியதாவது, ‘‘கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் மலைக்குகைகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஆய்வு நடத்தச்சென்றோம்.

அங்கு செல்லியம்மன் கோயில் வளாகத்தில் புதிய கற்கால கற்கோடாரிகள் வழிபாட்டில் இருப்பதை கண்டறிந்தோம், அந்த கோயிலுக்கு எதிரே ‘தம்புரான் குன்று’ என்ற சிறிய குன்றில் ஆய்வு செய்த போது அங்கு புதிய கற்கால மக்கள் வாழ்ந்த குகை ஒன்றையும் கண்டறிந்தோம்.

தம்பிரான்’ என்றால் தலைவன், இறைவன் என்பது பொருள். இக்குகையானது கிட்டத்தட்ட 10 பேர் வாழ ஏற்றதாக அமைந்துள்ளது. இக்குகையின் ஒரு புறத்தில் கோடை காலத்திலும் வற்றாத 3 சுனைகள் காணப்படுகிறது. குகையின் உட்புறத்தில் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தம் 5 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அதில் 3 ஓவியங்கள் அழியாமல் முழுமையாக காட்சியளிக்கிறது. அதில் ஒன்று இருப்பிடத்தை குறிப்பதாகவோ அல்லது அந்த கால மக்கள் பயன்படுத்திய விளக்கினை குறிப்பதாக இருக்கலாம். அதன் அருகாமையில் பிறைக்குறியீடு வரையப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 2 ஓவியங்கள் கட்டங்களாக வரையப்பட்டுள்ளன.

ஸ்வஸ்திக்’ குறியீடு போல உள்ள இந்த ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அடுத்த ஓவியம் வட்ட வடிவில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நிலவையோ அல்லது சூரியனையோ குறிப்பதாக இருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக ஒரு மனித உருவமும் அவனது வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் வேட்டை நிகழ்வை குறிப்பதாக உள்ளது. நடுகற்களில் வில்லும், அம்பும் ஏந்தியவாறு வடிக்கப்பட்டுள்ள வீரனின் உருவம்போல இந்த ஓவியம் சிறப்பாக வரையப்பட்டுள்ளது. அதேபோல, இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள ‘குகைக்குன்று’ என்ற சிறிய குன்றில் 6-க்கும் மேற்பட்ட இயற்கையான குகைகள் காணப்படுகிறது.

இக்குகைகளை அந்தக் கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு சான்றாக குகை முகப்பில் வெள்ளை நிறத்தில் பாறை ஓவியம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது.

வேட்டை சமூகமாக காடுகளில் வாழ்ந்த அந்தக்கால மக்கள் வேட்டைப்பொருட்கள் மிகுதியாக கிடைக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் அங்கு ஓவியங்களை வரையும் பழக்கத்தினை கையாண்டு வந்தனர் என்பதை இந்த ஓவியங்கள் மூலம் அறிய முடிகிறது.

தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்ற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலப்பகுதியில் உள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பழங்கால மக்கள் இயற்கையான குகைகளில் வாழ்ந்து வந்தனர். அதற்கு சான்றாக அவர்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். அக்கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்பதால் இது போன்ற ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது இனக்குழு மக்கள் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தங்களது அன்றாட நிகழ்வுகளை இது போன்ற ஓவியங்கள் மூலம் பதிவு செய்யதிருக்கலாம்.

பழங்கால மக்களுக்கு வேட்டையாடுவது முக்கிய தொழிலாக இருந்தது. பல்வேறு மிருகங்களை வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால்,வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், விலங்குகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஓவியங்களை வரைந்திருக்கலாம்.

அதே நேரத்தில் மனித உருவம் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளது. மனித உருவங்களை எளிமைப்படுத்தி தேவைக்கு ஏற்றார்போல மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பொதுவாக உருவம், வண்ணம் ஆகியவற்றை கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன், ஓவியம் கிடைத்த இடத்தின் அருகே தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. இதுதவிர வண்ணக்கலவையை சுரண்டி எடுத்து வேதியியலில் ஆய்வகங்களில் வாயிலாகவும் காலம் கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிக அளவில் வெள்ளை நிறமும், சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொன்மையான ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. தமிழகத்தில் வட பகுதிகளில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டபோதிலும், திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் பாறை ஓவியம் இதுவாகும்.

செல்லியம்மன் கொட்டாய் பகுதியில் உள்ள குகைளில் நெருப்பு மூட்டி பொதுமக்கள் உணவு சமைத்து வருவதால் இங்குள்ள பாறை ஓவியம் அழியும் விளிம்பில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் இணைந்து பாறை ஓவியங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்’’.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x