Published : 13 Apr 2021 05:26 PM
Last Updated : 13 Apr 2021 05:26 PM

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 19-ம் தேதி வரை நெல் மூட்டைகளைக் கொண்டு வர வேண்டாம்: நிர்வாகம் அறிவிப்பு

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் நிறைந்துள்ளதால், வரும் 19-ம் தேதி வரை நெல் மூட்டைகளைக் கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் படையெடுத்தனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள எட்டுக் கிடங்குகளிலும் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால், நெல் மூட்டைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் அபாயம் உருவானது. இதன் எதிரொலியாக, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இன்று (ஏப்.13) நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகள் கவனத்துக்கு... அனைத்துக் கிடங்குகளிலும் நெல் மூட்டைகள் நிறைந்துள்ளதால் நெல் மூட்டைகளைக் கொண்டு வர வேண்டாம். வரும் 20-ம் தேதி முதல் நெல் மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x