தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''தென் கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை (0.9 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (ஏப்ரல் 14) தென் தமிழகம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (சென்டி மீட்டரில்)

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் 6, வேடசந்தூர் 5, குன்னூர், குடவாசல், கயத்தாறு தலா 4, பாடாலூர், கோவிலான்குளம், மணல்மேடு, ஸ்ரீமுஷ்ணம், மீமிசல், அரவக்குறிச்சி தலா 3, சூரழகோடு, பரமக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in