Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வேல்முருகன் நம்பிக்கை

தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வேல்முருகன் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். என்னுடைய பண்ருட்டி தொகுதி உட்பட கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்தும், மாநில அளவில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பேசினேன்.

200 இடங்களில் வெற்றி

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

ஸ்டாலின் முதல்வராவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரது ஆட்சியில் சமூகநீதி பின்பற்றப்படும். மதவாத சக்திகளுக்கு இங்கு இடம் கிடையாது.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள்விரோத சட்டங்கள் அனைத்தும்ரத்தாகும். இதெல்லாம் நடக்கும்என்று காத்திருக்கிறேன். இந்தமுறை, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்.

அரக்கோணத்தில் நடந்த படுகொலையை நியாயப்படுத்த யாரும் முன்வரக்கூடாது. சாதி, மத மோதல்களை உருவாக்கி அரசியலில் ஆதாயம் தேடும் கும்பல்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றால், சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, இதுபோன்ற குற்றங்களை விசாரித்து உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x