Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.2.78 கோடி அபராதம் வசூல்: கரோனா விதிகளை மீறினால் நடவடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரிக்கை

பொது இடங்களில் முகக் கவசம்அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தமிழகஅரசு பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை பின்பற்றாதோர், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறைதெரிவித்துள்ளது.

தெற்கு மண்டலத்தில் அதிகம்

இதில் அதிகபட்சமாக தெற்கு காவல்துறை மண்டலத்தில் மட்டும்ரூ.85.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ரூ.2.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 6,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ரூ.25.90லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீதான நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x