Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
தமிழக எல்லையில் உள்ள ஜுஜுவாடி சோதனைச் சாவடி அருகே மீண்டும் கரோனா தடுப்பு வாகன சோதனை மற்றும் இ-பாஸ் மையம் அமைக்கப்பட்டு கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் இ-பாஸ் சோதனை, உடல் வெப்பம் பரிசோதனை மற்றும் தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் புதிய விதிமுறைகளுடன் மீண்டும் தீவிரமாக தொடங்கி உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச்சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இச்சோதனைச் சாவடிக்கு தினமும் கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு நகர் வழியாக தமிழகத்துக்கு வருகின்றன.
இந்நிலையில் மாநில அரசு கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி இரண்டாம் முறையாக தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே இ-பாஸ் சோதனை மையம் செயல்படத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறுகையில், இச்சோதனைச் சாவடியில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்துக்குள் செல்ல அனுமதி உண்டு இம்மாநிலங்களைத் தவிர கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு தமிழகத்துக்குள் நுழைய அனுமதியில்லை.
அத்தகைய வாகனங்களில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மேலும் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கிருமி நாசினி தெளிப்பு
ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ஓசூர் மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முகாம் அமைத்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் 24 மணி நேரமும் 15 மாநகராட்சி ஊழியர்கள் மூன்று ஷிப்ட்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் எல்லையில் இயங்கி வரும் கரோனா தடுப்பு இ-பாஸ் கண்காணிப்பு மையத்தில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT