Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், கடந்த மாதம் முழுவதும் தேர்தல் நடைபெற்றதாலும் மின்தேவை அதிகரித்தது.
இதன்படி, கடந்த மாதமே தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறுஇடங்களில் கடந்த ஒருவார காலமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறும்போது, “சென்னையில் உள்ள தி.நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, துரைப்பாக்கம், பெரம்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மின்தடை ஏற்படுகிறது. குறைந்தது ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சமாக 3 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரியத்தின் மின்தடை புகார் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிப்படைகின்றனர்” என்றனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சில இடங்களில் மின்மாற்றிகள், பில்லர் பெட்டிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அதுவும் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. தரமணி துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த மாதம் 31-ம் தேதியன்று பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT