Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

வடசென்னையில் மெட்ரோ ரயிலால் மாநகர அரசுப் பேருந்துகளில் 40 ஆயிரம் பயணிகள் குறைவு

சென்னை

சென்னையில் வண்ணாரப் பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, மாநகர போக்குவரத்து கழகத்தில் 40 ஆயிரம் பயணிகள் வருகை குறைந்துள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில் கட்டணமும் குறைக்கப்பட்டது. இதன்படி, அதிகபட்சமாக ரூ.70 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது. பயண அட்டை மற்றும் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 மற்றும் 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்தக் கட்டண குறைப்பால், கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, மாநகர பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வடசென்னை மக்கள் விமான நிலையம், கிண்டி உள்ளிட்ட தென் சென்னைப் பகுதிகளுக்கு விரைவாகச் செல்ல மெட்ரோ ரயில்களையே பயன்படுத்துவதால் மாநகர போக்குவரத்து கழத்தில் இருக்கும் தினசரி பயணிகள் எண்ணிக்கையில் சுமார் 40 ஆயிரம் குறைந்துள்ளது’’ என்றனர்.

மீண்டும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் சாதாரண பேருந்துகளை அதிகரித்து இயக்கினால் மட்டுமே மாநகர பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x