Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தில் மதுரை மாசி வீதிகளில் நவீன சிமென்ட் சாலை: 100 டன் வாகனங்கள் சென்றாலும் சேதமடையாது

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாசி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை.

மதுரை

மதுரை மாசி வீதியில் 100 டன் எடையிலான வாகனங்களை தாங்கும் அளவுக்கு சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் ரூ.976 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தையொட்டி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஹைடெக் சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இச்சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடந்தது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் இப்பணிகள் 6 மாதத்துக்கும் மேலாக தடைப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு முன்பே பணிகளை முடிக்க 4 மாசி வீதிகளில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்தது. கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதியில் கருங்கல் சாலை, ஆவணி மூல வீதிகளில் பேவர் பிளாக் சாலை, மாசி வீதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா 2-வது அலை பரவி வருவதால் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக ஆட்சியர் அன்பழகன் அறிவித்தார். இருப்பினும் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட புதிய சாலைகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதில், மாசி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அனைவரையும் ஈர்த்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சித் திரைத் திருவிழாவின்போது, இந்தச் சாலை கள் தேர்கள் செல்வதற்காக புதிதாக அமைக் கப்படுவது வழக்கம். இந்நிலையில், நூறு டன் எடையுள்ள வாகனங்கள் சென்றாலும் தாங்கும் அளவுக்கு வலுவான சிமென்ட் சாலை அண்ணா பல்கலைக்கழகத் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மீனாட்சியம்மன் கோயில் பெரிய தேர் 40 டன் எடையும், சிறிய தேர் 20 டன் எடையும் கொண்டது. இந்தத் தேர்கள் மட்டுமில்லாது 100 டன் எடையுள்ள வாகனங்கள் சென்றாலும் இந்தச் சாலை சேதம் அடையாது. மாசி வீதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், அடிக்கடி கனரக வாகனங்கள் வந்து செல்லும். இதனால் பழுதடைவதால் ஆண்டுதோறும் புதிதாக சாலை அமைக் கப்படும். இனி அதற்கு அவசியம் இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x