Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

தென்காசி - நெல்லை பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டம்: கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாகஅரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள்நின்றுகொண்டு பயணிக்க அனுமதிஇல்லை என்றும், இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அரசுஉத்தரவிட்டது. ஆனால் தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் இந்த விதியை பின்பற்றமுடியாத நிலை உள்ளது.

அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்போர், கூலி வேலைக்குச் செல்வோர், வியாபாரத்துக்காக செல்வோர் காலை, மாலையில் பேருந்துபயணத்தையே நம்பியுள்ளனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும்பேருந்துகளில் தினமும் காலை வேளைகளிலும், இதேபோல் திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு செல்லும்பேருந்துகளில் தினமும் மாலையிலும் கூட்டம் அலைமோதும். கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவது தொடர்கிறது.

காலை 8 மணி முதல் 9.30 மணிவரை தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்துகள் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புறப்படும்போதே இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏறுவதால் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்கின்றனர். பாவூர்சத்திரம் வரும்போது படிக்கட்டுகளிலும் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. நேற்று காலையில் தென்காசியில் இருந்துதிருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்துகள் பாவூர்சத்திரம் வரும்போது படிக்கட்டுகளிலும் பயணிகள் நின்றுகொண்டு பயணித்தனர்.

மேலும், பெரும்பாலான பயணிகள்முகக்கவசம் அணியாமல் பயணித்தனர். முகக்கவசம் அணிந்தவர்களில்பெரும்பாலானோர் முறையாக அணியாமல் நாடிக்கு மட்டும் அணிந்துகொண்டும், சிலர் வாயை மட்டும் மறைக்கும் வகையில் அணிந்துகொண்டும் பயணித்தனர். இதனால் கரோனா பரவல் மேலும் தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்படி சாத்தியமாகும்?

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “தென்காசியில் இருந்தே அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. இருக்கைகள் காலியாக உள்ள பேருந்துகளில் மட்டுமே ஏற வேண்டும் என்றால், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறித்த காலத்துக்கு செல்ல முடியாது. தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

மதிய நேரத்தில் மட்டுமே இந்த வழித்தடத்தில் நெரிசலின்றி பயணிக்கமுடிகிறது. காலை, மாலையில் நெரிசலில்அவதிப்பட்டு பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. பேருந்துகளை கூடுதலாக இயக்காமல் நின்றுகொண்டு பயணிக்கக் கூடாது என்றால் எப்படி சாத்தியமாகும்?. பயணிகளின் சிரமத்தை கருத்தில்கொண்டு தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காலையிலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு மாலையிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”என்றனர்.

தகராறு ஏற்படும்

பேருந்து நடத்துநர்கள் கூறும்போது, “அரசு விதியை காரணம் காட்டி பயணிகளை ஏற்றாமல் செல்ல முடியவில்லை. பயணிகளை ஏற்ற மறுத்தால் வாக்குவாதம், தகராறு ஏற்படுகிறது. எனவே,வேறுவழியின்றி அனைவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைஏற்படுகிறது.

கூடுதல் பேருந்துகள் இயக்கினால் மட்டுமே இருக்கைகளில் மட்டும்பயணிகளை அமர வைத்து பேருந்துகளை இயக்க முடியும்” என்றனர்.

விதியை அமல்படுத்த நடத்துநர்கள் திணறல்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் ஒரே நாளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 2,699 பேருக்கு ரூ.5.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2,647 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.5,29,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 52 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் கூட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் கரோனா பரவல் குறித்த அச்சம் இல்லாமல் மக்கள் கூட்டம், கூட்டமாக நடமாடுவதை காண முடிகிறது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இருக்கைகளைத் தாண்டி ஏராளமான பயணிகள் கூட்டமாக நின்று கொண்டே பயணிப்பதை காண முடிகிறது. சில பேருந்துகளில் வாசல் படிகளில் தொங்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

பேருந்துகளில் இருக்கை அளவுக்கு மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை அமல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இயக்கப்படும் நகரப்பேருந்துகளில் பெரும் சிரமம் உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏறக்கூடாது எனக் கட்டாயப்படுத்த முடியவில்லை. மேலும், பயணிகளை ஏற்றாமல் விட்டு வரவும் முடியவில்லை. இந்த சிக்கலை தவிர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்குவது ஒன்றுதான் வழி என்கின்றனர் அவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x