Last Updated : 13 Apr, 2021 03:14 AM

 

Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் பயன்பெற ‘தாமிரபரணி’ பெயரில் ரயில் இயக்கப்படுமா?

கோப்புப்படம்

திருநெல்வேலி

தலைநகர் சென்னைக்கு ரயில்களே இல்லாத வழித்தடமான திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தின் வழியாக தாமிரபரணி பெயரில் புதிய ரயில் இயக்கபல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வரை 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டது. 1929 வரை 25 ஆண்டுகள் இந்த வழித்தடத்தில் தான் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு கொல்லம் ரயில் இயங்கி வந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திருநெல்வேலி, செங்கோட்டை மற்றும் மதுரை மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து இரண்டு தினசரி ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. அதன் பின்னர் 110 ஆண்டுகள் கழித்து 21.09.2012 -ல் மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அகலப்பாதையாக மாற்றப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை.

பயணிகள் சிரமம்

மேலும் சென்னையில் இருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம், அகஸ்தியர் அருவி,சொரிமுத்து அய்யனார் கோயில், பாவூர்சத்திரம் தினசரி காய்கறி சந்தை போன்றவற்றை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து இல்லை. இந்த குறையைபோக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாகதாமிரபரணி என்ற பெயரில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

அம்பை, கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சென்னை செல்வதற்கு திருநெல்வேலி மற்றும் தென்காசி ரயில் நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து ரயில் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

சுற்றுலா மேம்படும்

இதுகுறித்து திருநெல்வேலி- தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, “120 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தின் வழியாக தாமிரபரணி என்ற பெயரில் தினசரி ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரயில் இயக்கும்பட்சத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசிமாவட்டங்களில் சுற்றுலா மேம்படும். பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், கடையம்,ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், முக்கூடல், அம்பை,கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்த ரயில்பயனுள்ளதாக இருக்கும். ரயில்வேதுறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x