

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளர் மீது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி வட்டம் வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா (30). முதுகலை பட்டதாரி. இவர், நேற்று தனது கைக்குழந்தையுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்ப தாவது, ‘‘வாணியம்பாடி வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்த நான் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலின் தனி உதவியாளரான வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது, அரசு வேலைக்காக முயற்சி எடுத்து வருவதை அறிந்த அவர் தொழிலாளர் நலத்துறையினர் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அமைச்சர் நிலோபர் கபீலிடம் கூறி அந்த வேலையை எனக்கு வாங்கித் தருவதாகக் கூறினார்.
இதற்காக. ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். அதன்பேரில், நான் எனது தங்க நகைகளை அடகு வைத்தும், பல இடங்களில் கடன் வாங்கியும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரே கட்டமாக ரூ.15 லட்சத்தை பிரகாசத்திடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்ட அவர் 2 ஆண்டுகளாகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து பலமுறை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறினார்.
அமைச்சர் நிலோபர் கபீலை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற கேட்டபோது கூட அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நான் வாங்கிய கடன் தொகைக்கு என்னால் வட்டி செலுத்த முடியவில்லை, அடகு வைத்த தங்க நகைகளும் மூழ்கும் நிலைக்கு சென்றதால், நான் கொடுத்த பணத்தை பிரகாசத்திடம் திருப்பிக்கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்தார். இது குறித்து கடந்த 2019-ம் ஆண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
இதையறிந்த பிரகாசம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார். பாக்கியுள்ள ரூ.8 லட்சம் தரவில்லை. ஓராண்டு கழித்து தருவதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு பாக்கி பணத்தை கேட்டபோது, அவர் 2 காசோலைகளை கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.
இது குறித்து அவரிடம் தெரிவித்தபோது, ரூ.8 லட்சம் பணத்தை தர முடியாது எனக்கூறி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.